வியாழன், 25 மார்ச், 2010

வேகத்தடை

வேகத்தடை - தமிழ்நாட்டில் எல்லா சாலைகளிலும், எல்லா ஊர்களின் ஆரம்பத்திலும்,முடிவிலும் பார்க்ககூடிய ஒரு விநோதம்.இதில் ஆச்சரியம்,இது ஊருக்கு ஊர், உயரத்திலும், அளவிலும் வித்தியசமாக இருக்கும்.இதை நிர்மாணிக்கும் பொறியாளர்கள், அந்தந்த ஊர்களின் சண்டியர்கள்.

சட்டம், ஒழுங்கு,போக்குவரத்து, நிர்வகிக்கும் காவல் துறைக்கோ, அந்தந்த ஊர்களில் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கோ, அரசுசார்ந்த அதிகாரிகளுக்கோ, நிர்மாணிக்கப்பட்ட வேகதடைப் பற்றி எந்த விவரமும் தெரியாது.

பிரச்சினையே, எந்த அளவிலும் சேராத, உயரமான வேகத்தடைகளினால் தான்.இப்பொழுது வருகின்ற நவீன கார்களில், கார்களுக்கும், சாலைகளுக்கும் உள்ள உயர அளவு மிகக் குறைவாகவே உள்ளது. வேகத்தடை இருக்கிறது என்பதற்கு, எந்தவிதமான முன்னறிவிப்பு வாசகமோ, குறியீடோ, வைக்கவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. இந்த நிலையில், குறைந்த அளவு வேகத்தில் வருகின்ற, கார்கள் கூட , உயரமான வேகத்தடைகளில்  , கடக்கக்கூடிய உயர அளவு இல்லாததின் காரணமாக, அடிப்பக்கத்தில் உள்ள பாகங்களுக்கு சேதம் ஏற்பட்டு, கார் உரிமையாளர்களுக்கு பெரும் பொருட்சேதமும், செலவும் ஏற்படுகின்றன. பயணத்தில் கால தாமதமும் ஏற்படுகிறது.

சட்டம், ஒழுங்கு,போக்குவரத்து, நிர்வகிக்கும் காவல் துறை, அந்தந்த ஊர்களில் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள்  , அரசுசார்ந்த அதிகாரிகள்,  வேகத்  தடை தேவை பற்றிய சமூக, சிந்தனையும் , அறிவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

யாரைப்பற்றி எனக்கு என்ன கவலை, யாருக்கு எவ்வளவு நஷ்டம், எனக்கு என்ன லாபம் - இது தான் அரசியல் வாதிகளும்  , காவல் துறையும் கவனமாய் கடைபிடிக்கும்  வேத
ம ந்திரம்.

வேகத்தடை வேண்டியதுதான்.மறுக்கவில்லை, யாரும் எதிர்க்கவில்லை. எல்லா இடத்திலும் , ஒரே மாதிரியாக, ஒரே அளவாக, எந்த வாகனக்களுக்கும் இடையூறு   இல்லாமல் நிர்மானிக்கலாமே.

பூனைக்கு யார் மணி கட்டுவது ?

ஒரு பொது நல விரும்பி, ஒரு சமூக சேவகர், ஒரு பொது நல வழக்கு தொடரவேண்டும்.
களம் அமையட்டும், காலம் கணியட்டும், நல்லது நடக்கும். காத்திருப்போம்.
எல்லாம் நன்மைக்கே !                         .       .                                            

செவ்வாய், 16 மார்ச், 2010

நகரத்தார்

சைவமும் தமிழும் வளர்த்த குலம்
தர்மமே கண்ணெனக் கொண்ட இனம்
நகரத்தார் இனம்.
நன்மைகள் எங்கும் 
பெருகிடவேண்டும்
தீமைகள் யாவும் நீங்கிடவேண்டும்
சீர்மிகு மொழியாம் வளமான தமிழால்
வணங்குகின்றேன் அன்னை மீனாட்சியே
வருவாய் வந்து காத்தருள்வாய்



ஒரு லட்சம் ஜனத்தொகை உள்ள ஒரு சமூகம்.நீண்ட பாரம்பரியமும்,கலாச்சாரமும்,பண்பாடும் கொண்ட சமூகம்.தெய்வ நம்பிக்கை நிறைந்த சமூகம்.செட்டிநாடு என்ற தனிப் பெயருக்குச் சொந்தக்காரர்கள்.எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னேயும்,இப்பொழுதும் செய்து வருகின்ற செயல்களில்யெல்லாம் தனி முத்திரை பதித்தவர்கள். கோவில் திருப்பணி, ஆன்மீகப்பணி   , கல்விப்பணி, தர்மகாரியங்கள் என்று சமுதாயப்பார்வையோடு அத்தனையையும் சிறப்பாகச் செய்தவர்கள்.செட்டி நாட்டுச் சமையல்,செட்டிநாட்டு கட்டிடக்கலை, செட்டிநாட்டு சாமான்கள்,செட்டிநாடு நகைகள் என்று இன்று வரை தனிப்பெருமைக்கும், சிறப்புக்கும் உரியவர்கள்.


செய்யாத தர்மமில்லை,தொடங்காத தொழிலில்லை. அத்தனையும் சிறப்புடன் செய்தவர்கள்.
தொலைதூர நாடுகளுக்கும், இரநூறு ஆண்டுகளுக்குமுன்னமே வியாபார நோக்கத்தோடு பயணித்தவர்கள்.கால் பதித்த நாடுகளிலெல்லாம், கலை படைத்தார்கள்,செட்டி முருகனுக்கும் கோவில் படைத்தார்கள்.


கணக்குகளில் ஒரு ஒழுங்கு,கணக்கு எழுதுவதில் ஒரு முறை என்று உலகத்திற்கே வழிகாட்டியவர்கள். நம் நாட்டுச் சிறப்பு, மற்றும் நம் நாட்டு உணவு வகைகளை, தாம் சென்ற நாடுகளிலும், சென்ற நாடுகளில் கண்ட சிறப்பு, உணவு வகைகள், பொருட்களை நம் நாட்டிற்கும் கலாசாரப் பரிவர்த்தனை செய்து சிறப்புச்  சேர்த்தவர்கள். 


பர்மா தேக்கும்,பெல்சியம் கண்ணாடிகளும்,இத்தாலியநாட்டு மார்பிலும்,இங்கிலாந்து நாட்டு லாந்தர் விளக்குகளும்,பிரெஞ்சு நாட்டு பீங்கான்களும் செட்டிநாட்டு வீடுகளை அலங்கரிக்க கொண்டு வந்தவர்கள் .


வெளி நாட்டுப் பயணம் - 'கொண்டு விற்கப் போவது' என்று சொல்வார்கள். கண்டதை,கொண்டதை (தான் தன் பொருளாக உரிமையாகக் கொண்டதை)விற்று பொருள் சேர்ப்பது, சம்பாதிப்பது நகரத்தார்கள் கண்ட சிறப்பு. லாபத்தில் தர்மத்திற்கு ஒரு பங்கு,கடவுளுக்கும் ஒரு பங்கு என்று தொழில் தர்மம் கண்டவர்கள். 


ஒரு கணக்கு என்பது மூன்றரை ஆண்டுகள்.ஒரு கணக்கு முடிந்தவுடன் மேலாளர் (மேனேஜர் அல்லது ஏஜென்ட்) இந்தியாவிற்கு புறப்படுவார்.இவர் புறப்படுவதற்கு முன்பே புது மேலாளர் பொறுப்பேற்க சம்பளம் பேசி வந்திதிருப்பார். முதலாளி, கூட்டாளி, மேலாளர்,அடுத்தாள்,கணக்கப்பிள்ளை என்று பொறுப்பிலே அவரவர் தகுதி தெரிந்துவிடும்.


மேலாளர் பயணமாக இந்தியாவிற்கு புறப்படும் பொழுது, அவருக்கு பயணச்செலவு,சாமான் வாங்கப்பணம், லாபதில் பங்கு என்று தன் பணியாளர்களையும் சமநோக்கில் நடத்தியவர்கள்,நடத்திக் கொண்டு இருப்பவர்கள்.                                     


விருந்திலும்,விருந்தோம்பலிலும் நகரத்தார்களுக்கு ஈடு இணைதான் உண்டா? 


நகரத்தார்  பெருமையை செய்தியாகச் சொல்லும் தாலாட்டுக்கள் : 


விருந்தோம்பல் :

தலைமுறை தழைக்க தலை வாழையிலையும்,  
தஞ்சாவூர் தாட்டிலையும்  போட்டு                               
வந்தவரையெல்லாம் வணக்கமுடன் கையமர்த்தி 
ஊரெல்லாம் விருந்து வைக்கும் உத்தமனார் பேரன் இவன்.
வெளித்திண்ணைக்கு வராமல் 
உள்வளவில் அத்தனயும் மேற்பார்க்கும் 
ஊர்சமத்தி சிவகாமி ஆச்சி பேரன் இவன்.                


ஊர் முழுதும் பந்தி, இனிப்போ நாலு வகை  , பலகாரம் ஒன்பது ,
ஒவ்வொன்றும் தனிச் சுவை
தெருவுக்கு தெரு மேடை, அங்கெல்லாம்  சங்கீதக் கச்சேரி.
வளவு திண்ணையிலே சீட்டுக் கச்சேரி.
விருப்பம் போல் இடைப்பலகாரம்,               
அத்தனையும் மனம் கோணாமல் செய்திடும் மகராசன் பேரன் இவன் .
மகராசி மங்கை ஆச்சி பேரன் இவன்.  


மாவிலை, குருத்து தோரணுமும் கட்டி 
மங்காத குங்குமமும், வாசனை சந்தனமும்,ஜவ்வாதும்  இட்டு ,
பை நிறையப் பட்சணமும்,
கை நிறைய தாம்பூலமும் தட்டோடு, தட்டில்லாமல்                                                                                                                                                                                                   
தந்திடும் தரணியாளும் தர்மவான் பேரன் இவன்.
சிக்கனமாய் இருந்தாலும், சிருவாட்டுப் பணம் சேர்த்து,
திருவாட்சி செய்து வைக்கும் சிவகாமி ஆச்சி பேரன் இவன். 


வியாபாரம் :


கணக்கு வச்ச நாள் முதலாய்
கப்பல்லே வியாபாரம் 
தோனி கண்ட நாள் முதலாய் 
பர்மாவிலே வியாபாரம் 
ஏடு எடுத்த நாள் முதலாய் 
இலங்கையிலே வியாபாரம் 
மனை எடுத்த நாள் முதலாய் 
மலையாவிலே வியாபாரம்        


ஏறுவதும் கப்பல் 
இறங்குவதும்   கப்பலடி
கப்பலடி துறை மார்களெல்லாம் 
உங்கள்  ஐயா கூட்டாளி 
திரவியம் என்கோடி 
சேர்த்துவைத்தார் உங்கள் ஐயா


நான் மொளச்ச நாள் முதல
கொண்டு விக்கப் போனவுக  பாட்டைய்யா 
   
சுங்கம் கட்டும் முதலாளி 
தனிக்கப்பல்  முதலாளி 
முத்து, பவளம் ,ரத்தினமும் 
தினமும் கொள்முதல் 
திசைக்கொரு பக்கம் வியாபாரம்
அத்தனையும் கண்டவுக உங்க பாட்டைய்யா    


தர்மம் :


கோவிலும், குளத்தடியும், 
தண்ணீர் பந்தலும் கட்டிவச்சாக ,
நஞ்சையும் புஞ்சையும் எழுதி வச்சாக
கணக்குப் பார்த்து சிலவு செய்தவுக 
கணக்கின்றி தர்மம் செய்தவுக 
ஊருக்கு நல்லது செய்த உத்தமனார் உங்க ஐயா 


வீடுகள் :


முன் வாசல் முதலே  வெள்ளை பூச்சாம் 
முகப்பெல்லாம்   நீள நீள உத்திரமாம் 
நாலு கல்யாணம் கொள்ளும் நடு வாசலாம்
பள்ளிங்கு போட்டு வீடு கட்டி 
பர்மா தேக்காலே திருவாச்சி முகப்பு வச்சு 
பார்த்தா முகம் தெரியும் 
பாதம் வச்சா வழுவழுக்கும்
கண் பார்த்தா இடமெல்லாம் கலை நயம் தெரியும் 
 பின் வாசல் திறந்து விட்டால் 
முல்லைப் பூ வாசனையாம்
அத்தனையும் உங்க மூத்த ஐயா யோசனையாம்             
       
இவை தாலாட்டிலே மட்டுமே படிக்கிற உண்மை என்று எண்ண வேண்டாம்.
அன்றும், இன்றும், என்றும் நகரத்தாரிடம்,  நாம் பார்த்து, அனுபவித்து வருகின்ற உண்மை. 


அந்த சமூகம், மேலும் மேலும் சிறப்புப் பெறவேண்டும், வளர வேண்டும். அன்னை மீனாட்சி அருள் புரிய வேண்டும்.                  


  

செவ்வாய், 9 மார்ச், 2010

ஏன் மண முறிவு?

ஏன் மண முறிவு?   (சோமசுந்தரம் அருணாசலம்)

திருமண முறிவுக்குக் காரணம் மனம் சம்பந்தப்பட்டதா ?, மணம் சம்பந்தப்பட்டதா ?, இல்லை பணம் சம்பந்தப்பட்டதா?
கேள்வி மிகஎளிமையானது, அனால் நீண்ட பதிலை உள்ளடக்கிய கேள்வி.பதில் மிக ஆழமானது.நீந்திக் கடப்பவனுக்கு ஆழத்தைப் பற்றிய பயமில்லை.உடலில் வலுவும்  ஆரோக்கியமும், நம்பிக்கையும் அவசியம். அதே போன்று உண்மையோடு, நேர்மையோடு, விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்தோடு பிரச்சினைகளை அணுகினால் யாருக்குமே தோல்வி இல்லை, பிரிவு இல்லை, வெற்றி தான்.

கணவன், மனைவி இருவருக்குமிடையே, மனவேறுபாடுகளும் ,கருத்துவேறுபாடுகளும் ,தவிர்க்கமுடியாதது.பிரச்சினை இல்லாத வாழ்க்கை, உப்பு, சப்பு இல்லாத வாழ்க்கை. அலை இருந்தால் தான் கடல்.பிரச்சினையோடு கூடியது தான் வாழ்க்கை. பிணக்குகளை ,கை யாள்கின்ற முறையில் தான் பிரச்சினையே.கணவன், மனைவி இருவருக்குமிடையே உள்ள பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள், கோபதாபங்கள்எல்லாம் இருவருமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.நான்கு சுவர்களுக்கு உள்ளயேஇருக்கவேண்டும், வெளியே போகக்கூடாது.
என்று வெளியே போகிறதோ அன்றே தீர்க்க
முடியாத பிரச்சினைகள் ஆரம்பம் என்று கருதலாம்.
வெளி மனிதர்கள்,எவ்வளவு நெருங்கிய உறவாக, தாய், தந்தையாக இருந்தாலும் கூட, கையாளுகின்ற முறையில்
தன் சொந்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காரியத்தை கெடுத்துவிடுகிறார்கள்.
தாய் வீட்டுச் செல்வமும், தான் பெற்ற கல்வியும் ஒரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்கலாமே தவிர ஆதாரமாக நினைத்து விடக்கூடாது.

ஒரு பெண்ணுக்கு தாய் வீடு என்பது கோவில்
அங்கு கும்பிடப்போகலாமே தவிர
குடியிருக்க நினைப்பது தவறு

திருமணம், மனம் சம்பந்தப்பட்டது, பணம் சம்பந்தப்பட்டதல்ல.திருமணம் ஆயிரம்
காலத்துப் பயிர். குறிகிய காலதுப் பயிர் அல்ல. நடவு நட்டு, நூற்றிஎன்பது நாளில் அறுவடை செய்கின்ற நெல் சாகுபடி அல்ல.

திருமணம், பின் மணமுறிவு, பின் திருமணம் என்பது கலாச்சாரச் சீரழிவு, சமுதாயச்
சீரழிவு.பண்பாடற்ற,நாகரிகமற்ற ஒரு சமுதாயம் அமைய ஒரு வழித்  தடம் போட்டுக்கொடுப்பதர்க்குச்  சமமாகும் .

 நான், நீ என்று நினைக்காமல், நாம், நமக்கு என்று நினைத்தாலே, அங்கு மலர் மணம் பரப்பும்,  தென்றல் வீசும்.மனம் என்ற ஜன்னல் திறக்கட்டும்.விட்டுக்கொடுப்போம்.
திருமண பந்தம், தொடரவேண்டிய பந்தம், தொலைத்து விடக்கூடாத பந்தம்.

ஒருமணம், திருமணம், சிறப்புமணம்.மாறாத மனம், மறக்கமுடியாத வாழ்க்கையை அமைத்துத் தரும்.
              
மணமுறிவு, மறுமணம் என்பது அறியாத வார்த்தையாக, அகராதியில் இல்லாத வார்த்தையாக மாற்று வோம் .அடுத்த தலைமுறைக்கு நல்ல வழியை காண்பிப்போம், நல்ல நடைமுறையை விட்டுச் செல்வோம்.                  






























































































































.











i

திங்கள், 8 மார்ச், 2010

உண்மையேபேசி ஒருவன் இந்த உலகத்தில் வாழ முடியுமா?


உண்மையேபேசி ஒருவன் இந்த உலகத்தில் வாழ முடியுமா?


பணக்காரன் முதல் பரம ஏழை வரை மிகச் சதாரண காரியத்திற்கு கூட பொய் சொல்வது என்பது மிகச் சாதாரண மாகி விட்டது.எல்லாவற்றுக்கும் அடிப்படை பணம், பணம், பணம் தான்.உலகத்தில் உள்ள அத்தனை சுகங்களையும்,  அத்தனை செல்வங்களையும் அடைந்த பிறகும், அவன் தன் சுய லாபத்திற்காக மறுபடியும் சொல்லப்போவது பொய் தான். 

பொய்யின் மறு அவதாரங்கள் ஏமாற்றுவது, கோள் சொல்வது,திருடுவது.

பதவியில் இருப்பவனும் படித்தவனும் பொய் சொல்வதை மிகச் சிறப்பாக செய்கிறார்கள் தான் சொன்னது உண்மை என்று நியாயம் என்று வாதாடுகிறார்கள்.எல்லாம் இந்த வாழ்க்கைக்காக, இந்த நிலையற்ற உடம்பிற்காக.

குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ள நரிக்குச் சொந்தம்,
குள்ள நரி மாட்டிக்கிட்டா வேடனுக்குச் சொந்தம்,
தட்டுக்கெட்ட மனிதனுக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்.
கடைசியில் பார்த்தால் அடங்கப்போகும் அந்த ஆறடி மண்ணு தானே சொந்தம்,  
அந்த ஆறடி மண்ணும் அவனுக்குச் சொந்தமா , சொந்தமில்லையே!

உண்மை மட்டுமே பேசி ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தான் என்று சான்றுகள் இல்லை
சரித்திரம் இல்லை. அப்படி ஒருவன் இருந்தால் அவன் மனிதன் இல்லை.

ஞாயிறு, 7 மார்ச், 2010

ஆசாமிகள் என்றும் சுவாமிகள்ஆக முடியாது.

முன்னோர்கள் காண்பித்த, வழிபட்ட கோவிலில் உள்ள தெய்வங்களை கும்பிடுங்கள். தனி மனித வழிபாடு தவிர்த்துடுங்கள். எந்த தனி மனிதனுக்கும் தனி சிறப்பும், தெய்வ அருளும் கிடைக்கப் பெற்றதாக இந்த கலியுகத்தில் சான்றுகளும், நிகழ்வுகளும் இருப்பதாக இல்லை.வர வேண்டிய இன்பமும், துன்பமும், பிறர் தர வாரா.வர வேண்டிய
நேரத்தில் வந்து தான் தீரும்.விதியையும் மதியால் வெல்லலாம் என்ற விதிக்கு இந்த இடத்தில் மதி என்பது நேர்மையே.நேர்மை வழி சென்றால், கடை பிடித்தால் விதியை வெல்ல முடியம்.ஆசாமிகள் என்றும் சுவாமிகள்ஆக முடியாது  .தவறான மனிதன் பின் சென்று தவறான வழி சென்று, மன நிம்மதி இழந்து, பணத்தையும், சுய மரியாதையையும் இழந்து சிரமப்பட வேண்டுமா.கோவிலில் சென்று தான் சாமி கும்பிட
வேண்டும் என்பதில்லை.வீட்டிலே ஒரு நொடி பரம்பொருளை நினை
யுங்கள். இப்படியாவது கோவிலில் கூட்டம் குறையட்டும்.



























































































a










.

சனி, 6 மார்ச், 2010

இறையருள் கூடட்டும்

சைவமும் தமிழும் வளர்த்த குலம்
தர்மமே கண்ணெனக் கொண்ட இனம்
நகரத்தார் இனம்.
நன்மைகள் எங்கும் பெருகிடவேண்டும்
தீமைகள் யாவும் நீங்கிடவேண்டும்
சீர்மிகு மொழியாம் வளமான தமிழால்
வணங்குகின்றேன் அன்னை மீனாட்சியே
வருவாய் வந்து காத்தருள்வாய்


















gu