வெள்ளி, 11 அக்டோபர், 2013
காதல் காதல்
காதல் காதல்
டிவி சீரியல், சினிமா எங்கும் காதலே பிரதானம்
காதல் தவிர ,வேறு களமே இல்லையா
முடிந்த காதல் முடியாத காதல்
பண்பாடு மீறிய காதல்
இது தேவையா
நமக்குளே நடப்பதை
படம் போட்டு காட்டவேண்டுமா
அறியா பருவத்து பிள்ளைகளை
அறிந்தே கெடுக்கிறோமே
சிறந்த படம் என்று சொல்லுகின்ற
இன்றைய சினிமாவில்
சமுக சிந்தனை எங்கிருக்கிறது
சமுக நீதி எங்கிருக்கிறது
அடிதடியும், வெட்டுக் குத்தும்
பெரியோரை வசை பாடுதலும்
அரை வேக்காட்டு
அரை ட்ரவுசர் கலாசாரமும்
கற்பழிப்பும்,இதுதான் சிறப்பா?
இதுதான் சிறந்த சினிமாவா?
நாளைய தலைமுறைக்கு நல்லதை விட்டுச்செல்லுவோம்
பிள்ளைகள்
பெற்ற தாயின் உயரம் மாறவில்லை
நிறம் மாறவில்லை குணம் மாறவில்லை
பெற்றெடுத்த பிள்ளைகள் பிறந்த நாள் முதலாய் வளர்ந்து வளர்ந்து
வளர்ச்சியில் பெற்ற தாயையும்,தந்தையையும் மிஞ்சி நிற்கின்றார்
வயது கூடக் கூட
பெற்றோர் மீது காட்டும்
அன்பு, பாசம் கருணை நாளும் பொழுதும்
மாறுகிறதே - ஏன் ?
அறிவு கூடுகிறது
அன்பு மட்டும் அவசரமாகிறதே - ஏன் ?
அவசரத்தில் யார் மீதும் பழி போடாதீர்கள்
வாழ்க்கையின் அவசியம்
புது உறவுகளின் வரவு
பழையன மறக்கும் மனசு
இவையே காரணம்
குறை ஒரு பக்கம் மட்டுமே
என நினைப்பதும் தவறு
பொறுமை காத்து
உண்மை நினைத்து
இனி வரும் காலம்
அன்பு காட்டி அரவணைத்துச் செல்லுவோம்
காலன் மேல் கோபம்
விதி என்று சொல்லி வேதனை மட்டும் கூடுகிறதே
சிரிப்பின் மொழி மட்டும் தெரிந்த
பால் மணம் மாறா
பச்சிளம் குழந்தையும் பலியாகிறதே
பிறந்து உடன் வளர்ந்து முகம் பார்த்து
சிரித்த நாட்கள்
இன்றோடு முடிந்துவிட்டதே
ஒன்றரை வருடங்கள் உடன் இருந்த நாட்கள்
ஓராயிரம் கதைகள் சொல்லுமே
உள்ளத்தின் பல்லாயிரம் கனவுகள்
நினைக்க மனமின்றி அழிந்துபட்டதே
தாயையும் எடுத்துக்கொண்டாய்
சேயையும் எடுத்துக்கொண்டாய்
காலனே அவர்களிடம் உனக்கு என்ன முன் பாக்கி
கொடுமையின் அவதாரங்கள் ஆயிரமாயிரமாய் உலகில் இருக்க
உனக்கு இவர்கள் மேல் மட்டுமே என்ன அவசரம்
தீங்கு நினைக்காத தாயும்
தீங்கரியாத குழந்தையும்
ஒரு கன நொடியில்
காலனே உன் காலடியில்
ஏன் தந்தாய் இந்த வேதனை
கை பிடித்த கணவன் தனி மரமாய்
நிற்கச் செய்து விட்டாய்
மனம் பதை பதைக்க வைத்துவிட்டாய்
கடலின் நீரெல்லாம் ஒரு நாள் வற்றினாலும்
மலையெல்லாம் மணலாக மாறினாலும்
நீ தந்த ரணம் மட்டும் என்றும் ஆறாதே.
(உறவினர் வீட்டில், தாயும், சேயும் 07.10.2013 அன்று சேலம் - ராசிபுரம் அருகில் ஏற்பட்ட கார் விபத்தில் காலமாகி விட்டார்கள், அதன் வெள்ளிப்பாடு )
இரண்டு பக்கங்கள்
வாழ்க்கைக்கு நிம்மதியும் கவலையும்
சொத்திற்கு காசும் பிரச்சினையும்
சுகத்திற்கு பலமும் நோயும்
நட்பிற்கு அன்பும் வேதனையும்
கல்விக்கு அறிவும் மறதியும்
பாசத்திற்கு பண்பும் வேசமும்
தர்மத்திற்கு தானமும் விரையமும்
பக்திக்கு பணிவும் பகட்டும்
வீரத்திற்கு விவேகமும் வீராப்பும்
உறவுக்கு ஆதரவும் ஏளனமும்
பொறுமைக்கு நிதானமும் மடைமையும்
ஒன்றில்லாமல் ஒன்று மட்டும் வருவதில்லை
ஒன்று மட்டுமே வாய்த்துவிட்டால்
உண்மை என்ன என்பது தெரிவதில்லை
வாழ்வின் சமநிலை அடைந்தவர் யாருமில்லை
தலையும் பூவும் இருந்தால் தான் காசு
செலுத்தும் இடத்தில் செல்லுபடியாகும் காசு
மாறி மாறி வருவதால் பக்குவமாகும் மனசு
உணர்வுகள் - உணர்சிகள்
உணர்வுகளுக்கு,உணர்ச்சிகளுக்கு
எண்ணமே வார்த்தை
கண்ணீரே மொழி
வேதனையே ஒலி
சோகமே ஒளி
பாசமே உறவு
மனசே தாய்
ஆறுதலே தந்தை
பொறுமையே மருந்து
சுதந்திரம்
நம் தேசியக்கொடிக்கும் சுதந்திரம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே
சுதந்திரம் என்ற வார்த்தையில் "தந்திரம்" அடங்கி இருப்பதால் நம் அரசியல் வியாதிகள் தந்திரம் செய்தே பிழைக்கின்றார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)