சனி, 30 மே, 2015


        

                    தெலுக் இந்தான் தெண்டாயுதபாணி முருகன் 



துதிப்போரின் மனமெல்லாம் நிறைந்திருக்கும் கொஞ்சும் அழகன் 


அர்ச்சிப்போர் மனம் போல் வரும் பொருளைத் தரும் திருக்குமரன். 


துள்ளி வரும் வைர வேலும்,துயர் துடைக்கும் துளசி மாலையும்


உத்திராட்சமும்பதக்கமும் படியளக்கும் புன்னகையும் கொண்டு 


காலமெல்லாம் காத்திடும் வேலன் - தெலுக் இந்தான் 

தெண்டாயுதபாணி முருகன் .



மனசு ,

வயிறு  நிறைந்தவுடன், போதும்
என்று நினைக்கிற  மனசு ,
பொருள் நிறைந்து இருக்கும்  போதும் ,
போதாதுன்னு  ஏன் மாறுபட்டு நிக்குது ?

கோடி கோடியாய் குவிந்தபோதும் ,
கூடவருவது ஏதுமுண்டோ ?

கூட இருப்போர் நலம் காத்து
குணம் காப்பது நலமா ?
குழி பறிப்பது தகுமா ?

பட்டும், பீதாம்பரமும்,
பகட்டும் பாரினில் இருக்கும் வரையே !

கயமை செய்யாமை ,காயங்கள் தாராது.
பெருமை சேர்ப்பது, பொறுமை காப்பதே!

எனக்கு மட்டும் என்பது ஆணவம்.
கூடி  இருப்பது கோடி சேர்க்கும் ஆவணம்.

உண்மைகள் உயர்வானால் ,
உரிமைகள் நிலையாகும் .










பந்தயம்

வாழ்க்கையில் நீ சந்திக்கும் இடர்கள் - பந்தயம் .
கலங்காமல் எதிர்கொண்டால் - கண்ணியம் .
கடவுள் துணை நின்றால்  - புண்ணியம்

அது என்ன நியதி .

உன் முன்னோர்களிடமிருந்து உனக்கு நோய் -
அது பரம்பரை வியாதி .

உன் முன்னோர்களின் நல்ல குணங்கள் ,
உனக்கு வரவில்லையே ,
அது என்ன நியதி .

ஞாயிறு, 17 மே, 2015

நான் உன்னுள்ளே, இருக்கிறேன் .

நான் உன்னுள்ளே, இருக்கிறேன் .
நீ ,என்னுள்ளே இருக்கிறாய் .
பின் எப்படி நான் நானாக இருப்பேன் ?

என் விழிகள் ,இரண்டென்றாலும்,
பார்வைகள்  நான்கென்பேன்.
என் கண்களுக்குள்ளே, நீயே இருப்பதால் ,
இமைகள் மூட மறுக்கின்றன .

ஒட்டி உறவாட, உடல்கள் இருக்க ,
உள்ளம் உறங்கிட உன் மனதை தந்துவிடு !
அள்ளி அணைப்பது ,கைகலென்றாலும் ,
சொல்லிக் கொடுத்தது நீயல்லவா?

உன்  மேனி தரும் வாசம்,
அதுவே என் மூச்சின் சுவாசம் .
நலம்  அனைத்தும், சுகமென்றாலும்,
நயம் தரும் உன் சொல்லே சொர்க்கமென்பேன்.







 

வெள்ளி, 1 மே, 2015

03.05.2015 - சித்ரா பௌர்ணமி அன்று சித்திர குப்தனை வணங்குவோம்

03.05.2015 - சித்ரா பௌர்ணமி அன்று  சித்திர குப்தனை வணங்குவோம் 

சித்திரத்தின் நாயகன்,
சிகரத்தின் புத்திரன் ,
சித்ரகுப்த்தன் எனும் பெயரினன்.
சித்திரை பௌர்ணமியில் ,
நலம் காக்க வந்துதித்தனன்  .

சிறப்பாய் நாம் வாழ்ந்து,
பொறுப்பாய் இருப்பது நம் கணக்கு.
நல்லவை வரவிலும்,
தீயவை  செலவிலும்,
வைத்து நம் கணக்கை,
பார்ப்பது  அவன் பொறுப்பு.

காலனின் கணிப்பில்,
நேரங்கள் தப்புவதில்லை,
காலங்கள் மாறுவதில்லை,
இவையாவும் சித்திரகுப்தனின் சிறப்பு.

இருக்கும் காலத்தில்,
இல்லாதவை மறந்து,
இருப்பது நினைத்து,
இனிமை சேர்ப்பது,
நலமான வாழ்க்கைக்கு உரமாகும்.
உன்னதம் உயர்வாகும்.

சித்திரை நாயகனை,
சிந்தையில் வைத்து,
பௌர்ணமி நன் நாளில்,
வளம் தந்திட வணங்குவோம்.
வாழ்வுக்குப் பின் சுகம் தந்திடுவான்.
சந்ததிகள் நலம் காத்திடுவான் .
-----------------------------------------------------------