படைக் கருவிகளான ஆயுதங்களை, பஞ்ச பூதங்களை வணங்கும் மிருதுவான கைகளால் எடுக்க வேண்டாம். பிரச்சினைகள், பகை, என்று வந்த போதும், அதனை எந்த தருணத்திலும் வென்று வருகின்ற சிறப்பு,நேர்மை, பயமின்மை,அறிவு, ஆற்றல், திறமை, ஆகிய சிறப்புக் குணங்களை நகரத்தார்களுக்கு கொடுக்கவேண்டும் என்கிறார் .
4 . கஜ லெட்சுமி
"ஆணை இருபுறம் அள்ளிச் சொரிபுனல் போல்
தானம் கொடுக்கும் தவப் பயனே
ஈனம் எனும் இப்பிறவி இனிமேலே போய் ஒழிய
துந்திக்கை தருவாய் துணை "
தனம் கொடுப்பவள் மகா லெட்சுமி.கிடைத்த தனத்தைக் கொண்டு, தானம், தர்மம் செய்யவேண்டும். வாழும் நாளில் நற்காரியங்கள் செய்வோர்க்கு மறுபிறப்பு என்பது இல்லை.இந்த நம்பிக்கையை மனதிலே நிலை நிறுத்த வேண்டும். அன்னையவள் துணை புரிய வேண்டும் என்கிறார்.
5 . சந்தான லெட்சுமி
"கல்லூரும் வாயால் கனி மழலை பேசுகின்ற
பிள்ளை வரம் அருளும் பேரன்பே
எல்லோரும் நல்லவரைப் பெற்றிடவும்
நாடு சிறந்திடவும் வல்லவளே ஈவாய் வரம்"
ஈடு இணையற்ற செல்வமாம் பிள்ளை செல்வத்தை தந்தருளும் அன்பு மிகுந்த தாயே, குணம், நலம் நிறைந்த பிள்ளைகள் எல்லோருக்கும் பிறந்திட வேண்டும். நல்லவர்களைக் கொண்ட நாடு சிறந்து செழிப்புறும்.அப்படியான நல்ல வரம் நாங்கள் பெற வேண்டும், தர வேண்டும் என்கிறார்.
6 .வித்யா லெட்சுமி
"வெற்றித் திருவே விளக்கேற்றிக் கும்பிடுவார்
கற்றுச் சிறந்திடவும் கல்வியுடன் மற்றவையும்
உற்றுச் சிறந்திடவும் உண்மை நிமிர்திடவும்
ஏற்றிடுக எங்கள் இடர் "
வெற்றித் திருமகளாம் மகா லெட்சுமித் தாயை தினம் விளக்கேற்றிக் கும்பிட வேண்டும். வணங்கு வோரெல்லாம் மேலான கல்வி பெற்றிட வேண்டும்.கல்விச் செல்வத்தோடு, மற்ற எல்லாச் செல்வங்களையும் உயர்வோடு பெற்று சிறக்க வேண்டும். உண்மை நிலைக்க வேண்டும். துன்பம் எல்லாம் நீக்கி காத்திட வேண்டும் என்கிறார்.
7 . விஜய லெட்சுமி
"நீங்காத நின் மகளும் நீண்ட திருமாலும்
பாங்காக அன்று வந்த பாற்கடல் போல்
தேங்காமல் நீ இருந்து நாளும் வளம் பெருக்கி
என்றைக்கும் நீங்காதிரு"
செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகிய திருமகளாம் மகா லெட்சுமி தாயே, மூன்று உலகிலும், அடியும், முடியும் காணமுடியாத நீண்ட திருமேனி கொண்ட மாலவனே, எங்கள் இல்லத்தில் என்றென்றும் குடி கொண்டிருக்க வேண்டும்.பரவி, விரிந்த பார் கடல் போன்று வளம் யாவும் பெருக வேண்டும் என்று வேண்டுகிறார்.
நகரத்தார் இனம் சிறக்கப் பாடியவர். அப்பெருமகனாரை நகரத்தார் பெருமக்கள் என்றென்றும் நினைத்துப் போற்ற வேண்டும், வணங்க வேண்டும்.
இரு உள்ளங்கையை சேர்த்து வைத்துப் பார்த்தால், கடைசியாக இருக்கும் இரண்டு கட்டை விரல்களும், இரு பக்கமும் யானைகள் தும்பிக்கையை நீட்டிக் கொண்டிருப்பது போன்றும், நடுவிலே உள்ள எட்டு விரல்களும் அஷ்ட லெட்சுமியையும் குறிப்பதாகவும் சொல்லுவார்கள். இது குறித்து வட மொழியில் மந்திரம் ஒன்று உண்டு. அந்த மந்திரம்,
"கர கிரக வரத லெட்சுமி
கர மத்ய சரஸ்வதி
கர மூலதே கோவிந்தா
பிரபதே கர தர்ஷனம் "
கைகளின் விரல்களில் லெட்சுமியும், மையப் பகுதியில் சரஸ்வதியும்.கீழ் பகுதியில் கோவிந்தனும் (மகா விஷ்ணு ) வாசம் செய்வதாக நம் புராணங்கள் கூறுகின்றன.
இதன் காரணமாகத் தான், காலை எழுந்தவுடன், இரு கைகளையும் சேர்த்து வைத்து உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள்.பார்க்கும் பொழுது மகா லெட்சுமியை நினைக்கிறோம், திரு மகளின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை தான் வாழ்க்கை.
நல்லவனவற்றை நினைக்க வேண்டும், சொல்ல வேண்டும், செய்ய வேண்டும்.நமக்கு கிடைப்பதும், நாம் கொடுப்பதும், அத்தனையும், அன்னையவள் திருமகளாம் மகா லெட்சுமி நமக்கு கொடுத்தது.
நன்று பல செய்து, நலம் பல பெற்று வளர்வோம், வாழ்வோம்.