சனி, 26 அக்டோபர், 2013

மலரும் மணமும் இரண்டல்ல                  
பணமும்  மதிப்பும்  இரண்டல்ல
கருத்தும் செயலும் இரண்டல்ல
கணவரும் மனைவியும் இருவரல்ல

ஒத்திசைத்து ஓங்கு  புகழ் பெறவே
உன்னதமான நன் நாளம் திருமண  நாளிலே
வளரும் நினைவுகளும் வருங்கால கனவுகளும்
வளமாய் வந்துதித்து வளம் பெருக்க வணங்குகிறேன் 

(face book நண்பரின் திருமண நாளில் அனுப்பிய வாழ்த்து )   

வெள்ளி, 25 அக்டோபர், 2013

நடைப்பயிற்சி

   உடல் வளம் பேண நல்லது என்றே

 

நடைப்பயிற்சி கொண்டார் 
நல்லது, நல்லது உடல் நலத்திற்கு நல்லதே 

நடைப்பயிற்சி கொண்ட இடத்தில் 
நல்ல விஷயம் பேசி நயம் பெறுவதும் நலமே 

நடைப் பயிற்சி சென்று, 
நாளும் வீண் வம்பும் விவகாரமும் பேசி 
ஊர் வம்பை விலைக்கு வாங்கி 
தீராப் பகையும் சேர்த்து 
நடைப்பயிற்சி பெறுவது 
நலம் தருமா உடலுக்கு ? 

மனம் கெட்டுப்போம். 

கேடுடைய செயல் தவிர்த்து 
மன நலம் பேணுதல் மதிப்பான செயலாகும்


அரசியல் வாதி


 

கஞ்சி வைத்த கரை வேட்டி 
அரசியல் வாதி 
கஞ்சி இல்லா குவளை 
குடிசை வாசி 

உடையோ வெள்ளை 
உள்ளமோ கருப்பு 
அரசியல் வாதி 

உடையோ கருப்பு 
உள்ளமோ வெள்ளை 
குடிசை வாசி


மனமே சாட்சி


 

மனம் சொல்படி கேள் , 
மாறா நெறிப்படி வாழ் 
பணம் நிலைப்படி குவியும்



புதன், 23 அக்டோபர், 2013

அமைதி காப்பது




அமைதியாய்  இருப்பது அழகு தான்
சொல்வதை உடன் சொல்லிவிடுவது அழகாகும்
சொல்ல வருவதை சொல்லாமல் இருப்பது பிசகாகும்
உண்மை அறிந்து உடன் சொல்லவது சிறப்பாகும்
வியாபாரத் தந்திரம் என்று மறைப்பது தவறாகும்
விளையாட்டாக பேசிய வீண் பேச்சும்  வினையாகும்
உதவிக்கு துணை நின்று பேசுவது நட்பாகும்
பணிவான பேச்சு பண்பாகும் 
அமைதி காத்து சிறப்பு பெறுவதே  உயர்வாகும் 

தளர்வு வேண்டாம்


விழுந்தவன் எழுவது முயற்சி 
எழாமல் இருப்பது தளர்ச்சி 
முயன்றவனுக்கு கிடைப்பது வளர்ச்சி 
தளர்ந்தவனுக்கு கிடையாது எழுச்சி



ஞாயிறு, 20 அக்டோபர், 2013

வியாபார நுணுக்கம்


கல்லுக்கட்டி கந்தசாமிக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம்.கந்தசாமி சீசனுக்கு தகுந்தமாதிரி எல்லா வியாபாரமும் செய்யக்கூடியவர். எதிலும் வேகம். 
குறைந்த லாபம்இருந்தால்போதும்.மர சாமனில்லுருந்து வைரம் வைடுரியம் என்று அவர் கைக்கு வரும். புது சாமான் என்பது மட்டுமல்ல , பழைய சாமான்களும் அவர் வியாபாரத்தில் உண்டு. 

போன வாரம் அவர் செய்த வியாபாரம் வெள்ளி சாமான்கள். கை பணத்தைப்போட்டு பொருளை வாங்கிவிட்டார் . யாருக்குத் தேவை , யாரிடம் போனால் படியும் என்ற அவர் கணக்கு எப்போதும் சரியாக இருக்கும். 

புதுக்கோட்டையில் இருக்கும் ராங்கியம் ராமசாமி செட்டியார் மருந்து வணிகத்தில் பெரிய புள்ளி. அவருக்கு மகள் இருப்பதும் மகள் திருமணத்தில் கொடுக்க அவருக்கு இந்த சாமான்கள் தேவை இருக்கும் என்பது கந்தசாமியின் கணிப்பு. அவருக்கு போனில் பேசி விஷயத்தை சொன்னவுடன், சாமான்களுடன் புறப்புட்டு வரச் சொல்லிவிட்டார். 

அடுத்த 2 மணி நேரத்தில் கந்தசாமி, ராமசாமி செட்டியார் வீட்டில் ஆசர். எலெக்ட்ரானிக் தராசு, சகிதம் இறங்கியவுடன், மள மளவென வெள்ளி சாமான்கள் எடுத்து வைக்கப்பட்டன , விலை பேசி முடிவானவுடன் ,கந்தசாமி எடை போட்டார். எடை குறிக்கப்பட்டன. செட்டியாருக்கு ரொம்ப திருப்தி, சாமனிலும்,விலையிலும் . 

எல்லாம் முடிந்தவுடன் ,கந்தசாமி பணத்தை பெறுவதில் எந்த அவசரமும் காட்டவில்லை. 
அப்பச்சி, என் மக வீடு இங்கு பக்கத்தில் இருக்கிறது , ஒரு நடை போய் தலையை காட்டிவிட்டு வந்திடறேன் என்று சொல்லி விட்டு எலெக்ட்ரானிக் தராசு ,மற்ற கொண்டுவந்த பைகள் எல்லாவற்றையும் அங்கயே வைத்துவிட்டு கிளம்பிவிட்டார் . 

ராமசாமி செட்டியாருக்கு ஒரு சபலம். எல்லோருக்கும் இயற்கையாய் வருவது.எலெக்ட்ரானிக் தராசு தான் இருக்கிறதே, நம் திருப்திக்கு திறம்ப எடை போட்டு பார்த்து விடுவோம் என்று எடை போட்டு பார்த்து விட்டார். 
எடை மிக சரியாக இருந்தது. 

கந்தசாமி, எலெக்ட்ரானிக் தராசை வைத்துவிட்டு போனதின் நோக்கமே அது தான் . 

இது தான் வியாபார நூணுக்கம்.நம்பிக்கையின் வேர்.



சுகம்


பை  நிறைய பணம்  இருந்தால் சுகமா ?
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல் இருந்தால் சுகமா ?

கால் பிடித்துவிட பெண்  இருந்தால் சுகமா  ?
சேவகம் செய்ய வரிசையில் ஆள் நின்றால் சுகமா ?
வண்ணப் பட்டு உடுத்தி வளைய வருவது சுகமா ?

விதம் விதமாய் உண்பது சுகமா ?
அழைத்த கூட்டத்தில் முதல் மரியாதை பெறுவது சுகமா ?

அத்தனையும் சுகமில்லை 

குழந்தையின் சிரிப்பு சுகம் !
படுத்தவுடன் வரும் தூக்கம் சுகம் !
ஆதரவான குடும்பம் சுகம் !
பலருக்கு உதவுவது சுகம் !
பகட்டில்லாமல் வாழ்வது சுகம் !
பகையின்றி பண்போடு இருப்பது சுகம் !
நல்லவன் என்ற பெயர் பெறுவதே சுகம் !


வாழ்ந்து பார்

 

   எழுதுவது எழுத்து 

படிப்பது படிப்பு 
கொடுப்பது தர்மம் 
பகிர்வது அன்பு 
உதவுவது நட்பு 
உருதுணையே பண்பு 
சிக்கனமே வாழ்க்கை 
பணிவே பக்தி 
மௌனமே ஞானம் 
வாழ்ந்து பார் வாழ்கை சிறக்கும்



குடி - குடியை கெடுக்கும்

குடி - குடியை கெடுக்கும் 
 

குடிப்பது அவசியம் 
குடிநீரை குடிப்பது அவசியம்


புகை பிடித்தல்

புகை பிடித்தல் 

புகைக்கும் சுருட்டு 
புகையும் 
எரிக்கும் 
உன் சாவின் பாதையை 
வாழ்விலே பார்க்கும் 
பெருமை 
உனக்கு கிடைக்கும் 
பெரும் பரிசு

வெள்ளி, 11 அக்டோபர், 2013

உறவுகள்

உறவுகள் உன்னதமானது 
உண்மையாய் இருக்கும்போது 

உறவுகள் அவசியமானது 
கேட்ட உதவிகள் கிடைத்த போது 

உறவுகள் அர்த்தமற்றது 
பதவி சுகம் பணம் பெரிதென்று நினைக்கும்போது 

உறவுகள் நிலை பெறவேண்டும் 
கொடுத்து உதவும் குணம் வேண்டும் 
சம நிலை நோக்கோடு 
பிறர் நிலை நினைக்க வேண்டும் 
இன்று இருப்பதே நிரந்தரம் இல்லை 
என்ற குணம் வேண்டும்


காதல் காதல்

காதல் காதல் 
டிவி சீரியல், சினிமா எங்கும் காதலே பிரதானம் 
காதல் தவிர ,வேறு களமே இல்லையா 
முடிந்த காதல் முடியாத காதல் 
பண்பாடு மீறிய காதல் 
இது தேவையா 
நமக்குளே நடப்பதை 
படம் போட்டு காட்டவேண்டுமா 
அறியா பருவத்து பிள்ளைகளை 
அறிந்தே கெடுக்கிறோமே 

சிறந்த படம் என்று சொல்லுகின்ற 
இன்றைய சினிமாவில் 
சமுக சிந்தனை எங்கிருக்கிறது 
சமுக நீதி எங்கிருக்கிறது 
அடிதடியும், வெட்டுக் குத்தும் 
பெரியோரை வசை பாடுதலும் 
அரை வேக்காட்டு 
அரை ட்ரவுசர் கலாசாரமும் 
கற்பழிப்பும்,இதுதான் சிறப்பா? 
இதுதான் சிறந்த சினிமாவா? 

நாளைய தலைமுறைக்கு நல்லதை விட்டுச்செல்லுவோம்


பிள்ளைகள்

பெற்ற தாயின் உயரம் மாறவில்லை 
நிறம் மாறவில்லை குணம் மாறவில்லை 
பெற்றெடுத்த பிள்ளைகள் 
பிறந்த நாள் முதலாய் வளர்ந்து வளர்ந்து 
வளர்ச்சியில் பெற்ற தாயையும்,தந்தையையும் மிஞ்சி நிற்கின்றார் 

வயது கூடக் கூட 
பெற்றோர் மீது காட்டும் 
அன்பு, பாசம் கருணை நாளும் பொழுதும் 
மாறுகிறதே - ஏன் ? 
அறிவு கூடுகிறது 
அன்பு மட்டும் அவசரமாகிறதே - ஏன் ? 

அவசரத்தில் யார் மீதும் பழி போடாதீர்கள் 
வாழ்க்கையின் அவசியம் 
புது உறவுகளின் வரவு 
பழையன மறக்கும் மனசு 
இவையே காரணம் 

குறை ஒரு பக்கம் மட்டுமே 
என நினைப்பதும் தவறு 
பொறுமை காத்து 
உண்மை நினைத்து 
இனி வரும் காலம் 
அன்பு காட்டி அரவணைத்துச் செல்லுவோம்


காலன் மேல் கோபம்

விதி என்று சொல்லி வேதனை மட்டும் கூடுகிறதே
சிரிப்பின் மொழி மட்டும் தெரிந்த 
பால் மணம் மாறா 
பச்சிளம் குழந்தையும் பலியாகிறதே 
பிறந்து உடன் வளர்ந்து முகம் பார்த்து 
சிரித்த நாட்கள் 
இன்றோடு முடிந்துவிட்டதே 

ஒன்றரை வருடங்கள் உடன் இருந்த நாட்கள் 
ஓராயிரம் கதைகள் சொல்லுமே 
உள்ளத்தின் பல்லாயிரம் கனவுகள் 
நினைக்க மனமின்றி அழிந்துபட்டதே 

தாயையும் எடுத்துக்கொண்டாய் 
சேயையும் எடுத்துக்கொண்டாய் 
காலனே அவர்களிடம் உனக்கு என்ன முன் பாக்கி 
கொடுமையின் அவதாரங்கள் ஆயிரமாயிரமாய் உலகில் இருக்க 
உனக்கு இவர்கள் மேல் மட்டுமே என்ன அவசரம் 

தீங்கு நினைக்காத தாயும் 
தீங்கரியாத குழந்தையும் 
ஒரு கன நொடியில் 
காலனே உன் காலடியில் 
ஏன் தந்தாய் இந்த வேதனை 
கை பிடித்த கணவன் தனி மரமாய் 
நிற்கச் செய்து விட்டாய் 
மனம் பதை பதைக்க வைத்துவிட்டாய் 
கடலின் நீரெல்லாம் ஒரு நாள் வற்றினாலும் 
மலையெல்லாம் மணலாக மாறினாலும் 
நீ தந்த ரணம் மட்டும் என்றும் ஆறாதே. 

(உறவினர் வீட்டில், தாயும், சேயும் 07.10.2013 அன்று சேலம் - ராசிபுரம் அருகில் ஏற்பட்ட கார் விபத்தில் காலமாகி விட்டார்கள், அதன் வெள்ளிப்பாடு )


இரண்டு பக்கங்கள்

வாழ்க்கைக்கு நிம்மதியும் கவலையும் 
சொத்திற்கு காசும் பிரச்சினையும் 
சுகத்திற்கு பலமும் நோயும் 
நட்பிற்கு அன்பும் வேதனையும் 
கல்விக்கு அறிவும் மறதியும் 
பாசத்திற்கு பண்பும் வேசமும் 
தர்மத்திற்கு தானமும் விரையமும் 
பக்திக்கு பணிவும் பகட்டும் 
வீரத்திற்கு விவேகமும் வீராப்பும் 
உறவுக்கு ஆதரவும் ஏளனமும் 
பொறுமைக்கு நிதானமும் மடைமையும் 
ஒன்றில்லாமல் ஒன்று மட்டும் வருவதில்லை 
ஒன்று மட்டுமே வாய்த்துவிட்டால் 
உண்மை என்ன என்பது தெரிவதில்லை 
வாழ்வின் சமநிலை அடைந்தவர் யாருமில்லை 
தலையும் பூவும் இருந்தால் தான் காசு 
செலுத்தும் இடத்தில் செல்லுபடியாகும் காசு 
மாறி மாறி வருவதால் பக்குவமாகும் மனசு


உணர்வுகள் - உணர்சிகள்


 

உணர்வுகளுக்கு,உணர்ச்சிகளுக்கு 
எண்ணமே வார்த்தை 
கண்ணீரே மொழி 
வேதனையே ஒலி 
சோகமே ஒளி 
பாசமே உறவு 
மனசே தாய் 
ஆறுதலே தந்தை 
பொறுமையே மருந்து



சுதந்திரம்

நம் தேசியக்கொடிக்கும் சுதந்திரம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே 

சுதந்திரம் என்ற வார்த்தையில் "தந்திரம்" அடங்கி இருப்பதால் நம் அரசியல் வியாதிகள் தந்திரம் செய்தே பிழைக்கின்றார்