சைவமும் தமிழும் வளர்த்த குலம்
தர்மமே கண்ணெனக் கொண்ட இனம்
நகரத்தார் இனம்.
நன்மைகள் எங்கும் பெருகிடவேண்டும்
தீமைகள் யாவும் நீங்கிடவேண்டும்தர்மமே கண்ணெனக் கொண்ட இனம்
நகரத்தார் இனம்.
நன்மைகள் எங்கும் பெருகிடவேண்டும்
சீர்மிகு மொழியாம் வளமான தமிழால்
வணங்குகின்றேன் அன்னை மீனாட்சியே
வருவாய் வந்து காத்தருள்வாய்
ஒரு லட்சம் ஜனத்தொகை உள்ள ஒரு சமூகம்.நீண்ட பாரம்பரியமும்,கலாச்சாரமும்,பண்பாடும் கொண்ட சமூகம்.தெய்வ நம்பிக்கை நிறைந்த சமூகம்.செட்டிநாடு என்ற தனிப் பெயருக்குச் சொந்தக்காரர்கள்.எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னேயும்,இப்பொழுதும் செய்து வருகின்ற செயல்களில்யெல்லாம் தனி முத்திரை பதித்தவர்கள். கோவில் திருப்பணி, ஆன்மீகப்பணி , கல்விப்பணி, தர்மகாரியங்கள் என்று சமுதாயப்பார்வையோடு அத்தனையையும் சிறப்பாகச் செய்தவர்கள்.செட்டி நாட்டுச் சமையல்,செட்டிநாட்டு கட்டிடக்கலை, செட்டிநாட்டு சாமான்கள்,செட்டிநாடு நகைகள் என்று இன்று வரை தனிப்பெருமைக்கும், சிறப்புக்கும் உரியவர்கள்.
செய்யாத தர்மமில்லை,தொடங்காத தொழிலில்லை. அத்தனையும் சிறப்புடன் செய்தவர்கள்.
தொலைதூர நாடுகளுக்கும், இரநூறு ஆண்டுகளுக்குமுன்னமே வியாபார நோக்கத்தோடு பயணித்தவர்கள்.கால் பதித்த நாடுகளிலெல்லாம், கலை படைத்தார்கள்,செட்டி முருகனுக்கும் கோவில் படைத்தார்கள்.
கணக்குகளில் ஒரு ஒழுங்கு,கணக்கு எழுதுவதில் ஒரு முறை என்று உலகத்திற்கே வழிகாட்டியவர்கள். நம் நாட்டுச் சிறப்பு, மற்றும் நம் நாட்டு உணவு வகைகளை, தாம் சென்ற நாடுகளிலும், சென்ற நாடுகளில் கண்ட சிறப்பு, உணவு வகைகள், பொருட்களை நம் நாட்டிற்கும் கலாசாரப் பரிவர்த்தனை செய்து சிறப்புச் சேர்த்தவர்கள்.
பர்மா தேக்கும்,பெல்சியம் கண்ணாடிகளும்,இத்தாலியநாட்டு மார்பிலும்,இங்கிலாந்து நாட்டு லாந்தர் விளக்குகளும்,பிரெஞ்சு நாட்டு பீங்கான்களும் செட்டிநாட்டு வீடுகளை அலங்கரிக்க கொண்டு வந்தவர்கள் .
வெளி நாட்டுப் பயணம் - 'கொண்டு விற்கப் போவது' என்று சொல்வார்கள். கண்டதை,கொண்டதை (தான் தன் பொருளாக உரிமையாகக் கொண்டதை)விற்று பொருள் சேர்ப்பது, சம்பாதிப்பது நகரத்தார்கள் கண்ட சிறப்பு. லாபத்தில் தர்மத்திற்கு ஒரு பங்கு,கடவுளுக்கும் ஒரு பங்கு என்று தொழில் தர்மம் கண்டவர்கள்.
ஒரு கணக்கு என்பது மூன்றரை ஆண்டுகள்.ஒரு கணக்கு முடிந்தவுடன் மேலாளர் (மேனேஜர் அல்லது ஏஜென்ட்) இந்தியாவிற்கு புறப்படுவார்.இவர் புறப்படுவதற்கு முன்பே புது மேலாளர் பொறுப்பேற்க சம்பளம் பேசி வந்திதிருப்பார். முதலாளி, கூட்டாளி, மேலாளர்,அடுத்தாள்,கணக்கப்பிள்ளை என்று பொறுப்பிலே அவரவர் தகுதி தெரிந்துவிடும்.
மேலாளர் பயணமாக இந்தியாவிற்கு புறப்படும் பொழுது, அவருக்கு பயணச்செலவு,சாமான் வாங்கப்பணம், லாபதில் பங்கு என்று தன் பணியாளர்களையும் சமநோக்கில் நடத்தியவர்கள்,நடத்திக் கொண்டு இருப்பவர்கள்.
விருந்திலும்,விருந்தோம்பலிலும் நகரத்தார்களுக்கு ஈடு இணைதான் உண்டா?
நகரத்தார் பெருமையை செய்தியாகச் சொல்லும் தாலாட்டுக்கள் :
விருந்தோம்பல் :
தலைமுறை தழைக்க தலை வாழையிலையும்,
தஞ்சாவூர் தாட்டிலையும் போட்டு
வந்தவரையெல்லாம் வணக்கமுடன் கையமர்த்தி
ஊரெல்லாம் விருந்து வைக்கும் உத்தமனார் பேரன் இவன்.
வெளித்திண்ணைக்கு வராமல்
உள்வளவில் அத்தனயும் மேற்பார்க்கும்
ஊர்சமத்தி சிவகாமி ஆச்சி பேரன் இவன். ஊர் முழுதும் பந்தி, இனிப்போ நாலு வகை , பலகாரம் ஒன்பது ,
ஒவ்வொன்றும் தனிச் சுவை
தெருவுக்கு தெரு மேடை, அங்கெல்லாம் சங்கீதக் கச்சேரி.
வளவு திண்ணையிலே சீட்டுக் கச்சேரி.
விருப்பம் போல் இடைப்பலகாரம்,
அத்தனையும் மனம் கோணாமல் செய்திடும் மகராசன் பேரன் இவன் .
மகராசி மங்கை ஆச்சி பேரன் இவன்.
மாவிலை, குருத்து தோரணுமும் கட்டி
மங்காத குங்குமமும், வாசனை சந்தனமும்,ஜவ்வாதும் இட்டு ,
பை நிறையப் பட்சணமும்,
கை நிறைய தாம்பூலமும் தட்டோடு, தட்டில்லாமல்
தந்திடும் தரணியாளும் தர்மவான் பேரன் இவன்.
சிக்கனமாய் இருந்தாலும், சிருவாட்டுப் பணம் சேர்த்து,
திருவாட்சி செய்து வைக்கும் சிவகாமி ஆச்சி பேரன் இவன்.
வியாபாரம் :
கணக்கு வச்ச நாள் முதலாய்
கப்பல்லே வியாபாரம்
தோனி கண்ட நாள் முதலாய்
பர்மாவிலே வியாபாரம்
ஏடு எடுத்த நாள் முதலாய்
இலங்கையிலே வியாபாரம்
மனை எடுத்த நாள் முதலாய்
மலையாவிலே வியாபாரம்
ஏறுவதும் கப்பல்
இறங்குவதும் கப்பலடி
கப்பலடி துறை மார்களெல்லாம்
உங்கள் ஐயா கூட்டாளி
திரவியம் என்கோடி
சேர்த்துவைத்தார் உங்கள் ஐயா
நான் மொளச்ச நாள் முதல
கொண்டு விக்கப் போனவுக பாட்டைய்யா
சுங்கம் கட்டும் முதலாளி
தனிக்கப்பல் முதலாளி
முத்து, பவளம் ,ரத்தினமும்
தினமும் கொள்முதல்
திசைக்கொரு பக்கம் வியாபாரம்
அத்தனையும் கண்டவுக உங்க பாட்டைய்யா
தர்மம் :
கோவிலும், குளத்தடியும்,
தண்ணீர் பந்தலும் கட்டிவச்சாக ,
நஞ்சையும் புஞ்சையும் எழுதி வச்சாக
கணக்குப் பார்த்து சிலவு செய்தவுக
கணக்கின்றி தர்மம் செய்தவுக
ஊருக்கு நல்லது செய்த உத்தமனார் உங்க ஐயா
வீடுகள் :
முன் வாசல் முதலே வெள்ளை பூச்சாம்
முகப்பெல்லாம் நீள நீள உத்திரமாம்
நாலு கல்யாணம் கொள்ளும் நடு வாசலாம்
பள்ளிங்கு போட்டு வீடு கட்டி
பர்மா தேக்காலே திருவாச்சி முகப்பு வச்சு
பார்த்தா முகம் தெரியும்
பாதம் வச்சா வழுவழுக்கும்
கண் பார்த்தா இடமெல்லாம் கலை நயம் தெரியும்
பின் வாசல் திறந்து விட்டால்
முல்லைப் பூ வாசனையாம்
அத்தனையும் உங்க மூத்த ஐயா யோசனையாம்
இவை தாலாட்டிலே மட்டுமே படிக்கிற உண்மை என்று எண்ண வேண்டாம்.
அன்றும், இன்றும், என்றும் நகரத்தாரிடம், நாம் பார்த்து, அனுபவித்து வருகின்ற உண்மை.
அந்த சமூகம், மேலும் மேலும் சிறப்புப் பெறவேண்டும், வளர வேண்டும். அன்னை மீனாட்சி அருள் புரிய வேண்டும்.